Header Ads

தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களில் முன்பதிவில்லா ரெயில் டிக்கெட் விற்பனை மூலம் ரூ.35½ லட்சம் வருவாய்

தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களில் முன்பதிவில்லா ரெயில் டிக்கெட் விற்பனை மூலம் ரூ.35½ லட்சம் வருவாய்

தீபாவளி பண்டிகை இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வெளியூர்களில் வசிப்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று கொண்டாடுவது வழக்கம். தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு வசதியாக தமிழகத்தில் நேற்று விடுமுறை தினமாக முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது.

கடந்த 3-ந்தேதி முதல் தொடர் விடுமுறையானது. பண்டிகையை கொண்டாட பலர் கடந்த 2-ந்தேதி மாலைக்கு மேல் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். இவர்களில் பலர் ரெயில் போக்குவரத்தையே தேர்வு செய்தனர்.

இதனால் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து முன்பதிவில்லா டிக்கெட் எடுத்து வெளியூர் சென்றவர் களின் எண்ணிக்கை அதிகமானது. கடந்த 2-ந்தேதி முதல் ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. கடந்த 3-ந்தேதி, நேற்று முன்தினமும் கூட்டம் அதிகமாக இருந்தது. தீபாவளிக்கு முந்தைய நாளான நேற்றும் பலர் ரெயில் மூலம் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

திருச்சி ஜங்ஷனில் இருந்து சென்னை, மதுரை, நெல்லை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், கரூர் மார்க்கமாக ரெயில்கள் அதிகமாக இயக்கப்படுவதால் முன்பதிவில்லா பெட்டிகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதுதவிர தீபாவளி பொருட்கள் வாங்க பக்கத்து மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ரெயில் மூலம் திருச்சி வந்து சென்றனர்.

இது குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது கூறுகையில், “தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் கடந்த 2-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை 3 நாட்களில் முன்பதிவில்லா டிக்கெட் விற்பனை வழக்கமானதை விட அதிகமாக இருந்தது. கடந்த 2-ந்தேதி கவுண்ட்டர்களில் ரூ.10 லட்சத்து 30 ஆயிரத்திற்கும், தானியங்கி எந்திரங்களில் ரூ.2 லட்சத்து 12 ஆயிரத்திற்கும், கடந்த 3-ந்தேதி கவுண்ட்டர்களில் ரூ.10 லட்சத்து 86 ஆயிரத்திற்கும், தானியங்கி எந்திரங்களில் ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்திற்கும், 4-ந்தேதி கவுண்ட்டர்களில் ரூ.8 லட்சத்து 88 ஆயிரத்திற்கும், தானியங்கி எந்திரத்தில் ரூ.1 லட்சத்து 81 ஆயிரத்திற்கும் ரெயில் டிக்கெட் விற்பனையானதன் மூலம் மொத்தம் ரூ.35 லட்சத்து 62 ஆயிரம் ரெயில்வேக்கு வருவாய் கிடைத்தது என்றார். பஸ் கட்டணத்தை விட ரெயில் டிக்கெட் கட்டணம் குறைவு என்பதால் பயணிகள் பலர் ரெயிலில் பயணம் செய்ததால் ரெயில்வேக்கு வருவாய் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

Source

No comments

Powered by Blogger.