ரெயில் நிலைய வளாகத்தில் இருந்து நுழைவு வாயில் வரை மாற்றுத்திறனாளிகள் செல்ல இலவச பேட்டரி கார் வசதி
திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை, தஞ்சை, நாகை உள்ளிட்ட பல்வேறு வெளியூர்களுக்கும், திருச்சி ரெயில் நிலையம் வழியாக தென் மாவட்டங்களுக்கும், வட மாநிலங்களுக்கும் ரெயில்கள் சென்று வருகின்றன. இதனால் ரெயில் நிலையம் எப்பொழுதும் பயணிகள் கூட்டத்துடன் பரபரப்பாக காணப்படும்.
இந்நிலையில் ரெயில் நிலையத்தின் முன்புற நுழைவு பகுதியில் இருந்து 7 நடைமேடைகளுக்கும் சென்று ரெயில் ஏறுவதற்கு வசதியாக ரெயில்வே நிர்வாகத்தின் சார்பில், ஒப்பந்தத்தின் அடிப்படையில் தனியார் நிறுவனம் சார்பில் கடந்த சில ஆண்டுகளாக இலவசமாக சிறிய பேட்டரி கார் ஒன்று இயக்கப்பட்டது.
தற்போது அந்த பேட்டரி கார் சேவை நிறுத்தப்பட்டு, ரெயில் நிலைய வளாகத்தில் மட்டும் இலவசமாக இயக்கப்பட்டு வந்தது. இதையடுத்து ரெயில்வே நிர்வாகத்தின் உத்தரவின் பேரில், மற்றொரு தனியார் நிறுவனத்தின் சார்பில் புதிய பேட்டரி கார் ஒன்று பயணிகளுக்கு தலா ரூ.30 கட்டணம் வசூலிக்கப்பட்டு 7 நடைமேடைகளுக்கும் இயக்கப்பட்டு வருகிறது.
இலவச பேட்டரி கார் வசதி
இந்நிலையில் ரெயில் நிலைய வளாகத்தில் இயங்கி வரும் சிறிய பேட்டரி காரில் 4 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்பதால், தனியார் நிறுவனம், ரெயில்வே நிர்வாகத்தின் அனுமதியுடன் 11 பேர் பயணம் செய்யும் வகையில் இருக்கைகள் கொண்ட புதிய பேட்டரி கார் நேற்று முன்தினம் முதல் இலவசமாக இயக்கப்படுகிறது.
இந்த பேட்டரி காரில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், உடல் நிலை சரியில்லாதவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் ஆகியோர் ரெயில் நிலைய வளாகத்தில் இருந்து நுழைவு வாயில் வரை இலவசமாக பயணம் செய்யலாம்.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த இலவச பேட்டரி கார் திருச்சி ரெயில் நிலைய வளாகத்தின் முன்புறத்தில் செல்லும் நடைபாதையில் இருந்து பயணச்சீட்டு முன்பதிவு மையம் வரை இயக்கப்படுகிறது. மேலும், சிறிய பேட்டரி காரை ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் இயக்குவதற்கு தனியார் நிறுவனம் ரெயில்வே நிர்வாகத்திடம் அனுமதி கேட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் ஸ்ரீரங்கத்தில் அந்த பேட்டரி கார் இயக்கப்படும்” என்றார்.
Post a Comment