Header Ads

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி கடைவீதிகளில் பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் குவிந்தனர்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி கடைவீதிகளில் பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் குவிந்தனர்

திருச்சி கடைவீதிகளில் தீபாவளி பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. அசம்பாவித சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.


தீபாவளி பண்டிகை வருகிற 18-ந்தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளிக்கு இன்னும் 9 நாட்கள் மட்டுமே இருப்பதால் திருச்சி கடைவீதிகள் களை கட்ட தொடங்கி உள்ளது. தீபாவளி பண்டிகையின்போது இனிப்பு வகைகள், பட்டாசு, புத்தாடைகள் அனைவர் வாழ்விலும் அவரவர் தகுதிக்கு தகுந்தாற்போல் இடம்பெறுகிறது.

திருச்சி நகரை பொறுத்தவரை முக்கியமான ஜவுளி கடைகள், நகை கடைகள் என அனைத்தும் என்.எஸ்.பி சாலை, பெரிய கடைவீதி, சின்ன கடைவீதி, நந்திகோவில் தெரு, மேலரண் சாலை ஆகிய பகுதிகளில் தான் உள்ளன. எனவே ஜவுளி, நகைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக வரும் பொதுமக்களின் கூட்டம் இந்த சாலைகளில் தான் அதிக அளவில் உள்ளது. மற்ற நாட்களை விட நேற்று மதியம் முதல் இரவு வரை மேலரண் சாலை மற்றும் என்.எஸ்.பி சாலையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

மேலும் தீபாவளி பண்டிகைக்காக துணிமணிகள் வாங்க கடைவீதிக்கு வரும் பொது மக்களிடம் பணம் மற்றும் பொருட்களை திருட வருபவர்களை கண்காணித்து பிடிக்க கோட்டை போலீஸ் சரகத்தில் தெப்பக்குளம் புறக்காவல் நிலையம், மலைக்கோட்டை நுழைவு வாயில், சிங்காரத்தோப்பு பகுதியில் பூம்புகார் விற்பனை நிலையம், பெரிய கடைவீதியில் இருந்து வரும் இடம் உள்ளிட்ட 6 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து அதில் அதிநவீன கேமரா, தொலைநோக்கி கருவி கொண்டு போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கோட்டை பகுதியில் சிங்காரத்தோப்பு, சின்னகடைவீதி, பாபுரோடு, நந்திகோவில் தெரு, மலைக்கோட்டை நுழைவு வாயில் உள்ளிட்ட பகுதிகளில் இரும்பு குழாய்களால் தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பகுதிக்குள் கார்கள், ஆட்டோக்கள், 2 சக்கர வாகனங்கள் செல்ல பண்டிகை காலம் முடியும் வரை தடைசெய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் சக்தி கணேஷ், மயில்வாகணன் ஆகியோர் மேற்பார்வையில் கோட்டை சரக போலீஸ் உதவி கமிஷனர் பெரியய்யா தலைமையில் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சீத்தாராமன் தலைமையில் சுமார் 480 போலீசார் காலை, மாலை என 2 ‘ஷிப்டு’ ஆக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குற்ற சம்பவங்களை தடுக்க சாதாரண உடையிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் இறங்கி உள்ளனர். பள்ளி, கல்லூரி என்.எஸ்.எஸ்.மாணவர்களும் போலீசாருக்கு உதவியாக செயல்பட்டு வருகிறார்கள்.

Source:http://www.dailythanthi.com/News/Districts/2017/10/09034912/People-gathered-to-buy-goods-in-the-Trichy-bazaars.vpf
Source:

No comments

Powered by Blogger.