Header Ads

திருச்சி டவுன் ரெயில் நிலையத்தில் நடைமேம்பாலம் அமைக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு

திருச்சி டவுன் ரெயில் நிலையத்தில் நடைமேம்பாலம் அமைக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் மற்றும் ஸ்ரீரங்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையில் டவுன் ரெயில் நிலையம் உள்ளது. திருச்சி நகரின் மைய பகுதியில் இந்த ரெயில் நிலையம் அமைந்து உள்ளது. திருச்சியில் மிகப்பெரிய அளவிலான ஜவுளி கடைகள், நகை கடைகள், வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் உள்பட வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த பகுதிகளான மலைக்கோட்டை, பெரிய கடைவீதி, சின்ன கடைவீதி மற்றும் காந்தி மார்க்கெட் ஆகியவை இந்த ரெயில் நிலையத்தை சுற்றியே அமைந்து உள்ளன.

நின்று செல்லும் ரெயில்கள்

திருச்சி-சென்னை கார்டு லைன் மார்க்கத்தில் அமைந்து உள்ள இந்த ரெயில் நிலையத்தின் வழியாக தான் தென் மாவட்டங்களில் இருந்து திருச்சியை கடந்து செல்லும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அனைத்து ரெயில்களும் இந்த சிறிய ரெயில் நிலையத்தில் நிற்பது இல்லை என்றாலும் திருச்சியின் அடையாளமான மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் மட்டும் இந்த ரெயில் நிலையத்தில் அன்றாடம் நின்று செல்கிறது.

இதுதவிர விருத்தாசலம்-திருச்சி, கடலூர்- திருச்சி, லால்குடி-திருச்சி, விழுப்புரம்-மதுரை பாசஞ்சர் ரெயில்கள் இந்த ரெயில் நிலையத்தில் நின்று செல்கின்றன. விழுப்புரத்தில் இருந்து திண்டுக்கல் வரை இருவழி ரெயில் பாதை அமைக்கும் திட்டத்தின் கீழ் இரு வழிப்பாதை அமைக்கப்பட்ட பின்னர் இங்கு இரண்டு பிளாட்பாரங்கள் இயங்கி வருகின்றன. சென்னையில் இருந்து திருச்சிக்கு வரும் ரெயில்கள் பெரும்பாலும் இரண்டாவது பிளாட்பாரத்திலேயே பயணிகளை இறக்கி விடுகிறார்கள். இந்த பிளாட்பாரத்தில் இறங்கும் பயணிகள் முதலாவது பிளாட்பாரத்தை கடந்து தான் வெளியே செல்ல முடியும்.

பயணிகள் அவதி

ஆனால், இரண்டாவது பிளாட் பாரத்தில் இருந்து முதலாவது பிளாட்பாரத்திற்கு செல்வதற்கு சுரங்கப்பாதையோ அல்லது நடை மேம்பாலமோ இல்லை. இதனால் பயணிகள் தண்டவாளத்தை கடந்து தான் செல்ல வேண்டியது உள்ளது. அதே போல் இரண்டாவது பிளாட்பாரத்தில் நிற்கும் ரெயில்களில் ஏறுவதற்கும் முதலாவது தண்டவாளத்தை கடந்து தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இப்படி கடந்து செல்லும் போது பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள் கீழே விழுந்து காயம் அடைந்து விடுகிறார்கள். மேலும் ரெயில்வே சட்டத்தின் படி தண்டவாளத்தை கடப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

நடைமேம்பாலம் அமைக்கப்படுமா?

டவுன் ரெயில் நிலையத்தில் நடைமேம்பாலம் அமைக்கவேண்டும் என்பது பயணிகளின் நீண்டகால கோரிக் கை ஆகும். அது மட்டும் இன்றி ரெயில் நிலையம் அமைந்து உள்ள மிகப்பெரிய குடியிருப்பு பகுதியான தேவதானம் பகுதியில் இருந்து இன்னொரு குடியிருப்பு பகுதியான சஞ்சீவி நகருக்கு செல்பவர்களும் தண்டவாளத்தை கடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே, டவுன் ரெயில் நிலையத்தில் நடைமேம்பாலம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். 

Source:http://www.dailythanthi.com/News/Districts/2017/09/18015150/Will-the-stadium-be-set-up-at-Trichy-Down-Rail-Station.vpf

No comments

Powered by Blogger.