ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம் சார்பில் காவிரி மகா புஷ்கர விழா பக்தர்களுக்கு கூடுதல் வசதி
திருச்சி கலெக்டர் ராஜாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் காவிரி மஹா புஷ்கரம் விழா கடந்த 12ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதையொட்டி விழாவுக்கு வரும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனத்திற்கு செல்லவும், தரிசனம் செய்யவும் கோயில் வளாகத்தினுள் பேரிகாட் அமைப்புகள் நிழற்பந்தலுடன் கட்டப்பட்டுள்ளது.கோயிலுக்கு வெளியில் உள்திருவீதியில் மூன்று இடங்களில் கண்காணிப்பு மேடை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தினுள் பப்ளிக் அட்ரஸ் சிஸ்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கோயிலுக்கு வெளியில் மூன்று வாயில்கள் அருகிலும் கழிவறை, குளியலறை வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் காலை 8 மணி முதல் இரவு 10மணி வரை கோயில் வளாகத்திற்குள் நாள்முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. கோயில் சேவை விபரங்கள், மூன்று வாயில்களிலும் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்குள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பக்தர்களின் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு கோயிலுக்குச் சொந்தமான ஜவுளி ரெங்கசாமி அய்யங்கார் கட்டளை தோப்பு பகுதியில் பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் உத்தரவிற்கிணங்க மேட்டூர் அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு பக்தர்கள் புனித நீராட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் பக்தர்கள் பாதுகாப்பாக குளிப்பதற்கு வசதியாக சவுக்கு மரங்களை கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறை பகுதியில் ஆற்றில் இறங்க ஏதுவாக மணல் மூட்டைகள் அடுக்கி பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அவசர உதவிக்கு காவல் துறை எண்: 0431-2432235, 94981 - 00637 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.
Post a Comment