Header Ads

காவிரி மகா புஷ்கர விழா: ஸ்ரீரங்கத்தில் 5–வது நாளாக பக்தர்கள் புனித நீராடினர்


காவிரி மகா புஷ்கர விழா: ஸ்ரீரங்கத்தில் 5–வது நாளாக பக்தர்கள் புனித நீராடினர்
காவிரி மகா புஷ்கர விழா ஸ்ரீரங்கத்தில் கடந்த 12–ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி அம்மா மண்டபம் சாலையில் உள்ள மாமுண்டி கோனார் திடலில் யாகசாலை அமைக்கப்பட்டு அங்கு பல்வேறு பூஜைகள், ஹோமங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் வேதவிற்பன்னர்கள், துறவிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
முதல் நாளன்று காரியசித்தி, தடங்கல்கள் நீங்க விஷ்வந்சேன இஷ்டி ஹோமமும், 2–ம் நாளன்று நன்மக்களைப்பெற சந்தான கோபால கிருஷ்ண இஷ்டி ஹோமமும், 3–வது நாளன்று சத்ரு பயம் நீங்க, ஆயுள் நீடிக்க, நினைத்த காரியங்கள் வெற்றி பெற சுதர்சன இஷ்டி ஹோமமும், நான்காம் நாளான நேற்று முன்தினம் லெட்சுமி நாராயண இஷ்டி ஹோமமும் நடைபெற்றன.
5–வது நாளான நேற்று காலை 8 மணிக்கு யாகசாலையில் வருண ஹோமமும், 8.30 மணிக்கு கோபூஜையும் நடைபெற்றது. பின்னர் நீண்ட ஆயுள், ஆரோக்கியம் பெற தன்வந்திரி இஷ்டி ஹோமம் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதில் ஆழிமலைக் கண்ணா பாசுரம், தொடர் பாராயணமும் வேத, திவ்ய பிரபந்த, இதிகாச, புராண படலமும் நடைபெற்றது. மதியம் 1 மணிக்கு பூர்ணாஹுதி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் மாலை 6.30 மணியளவில் அம்மாமண்டபம் படித்துறையில் காவிரி தாய்க்கு மங்கல ஆரத்தி மற்றும் மகா தீப ஆராதனை நடைபெற்றது. இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை சாந்தி ஹோமம் நடைபெற்றது. நேற்றும் ஏராளமான பக்தர்கள் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் புனித நீராடினர். காவிரி மகா புஷ்கரம் விழாவிற்கான ஏற்பாடுகளை காவேரி புஷ்கர பிரம்ம யக்ஞ கமிட்டியினர் செய்துள்ளனர்

No comments

Powered by Blogger.