Header Ads

ஸ்ரீரங்கத்தில் 12-ந்தேதி தொடங்க உள்ள காவிரி மகா புஷ்கர விழாவுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்

ஸ்ரீரங்கத்தில் 12-ந்தேதி தொடங்க உள்ள
காவிரி மகா புஷ்கர விழாவுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்

ஸ்ரீரங்கத்தில் வருகிற 12-ந்தேதி தொடங்க உள்ள காவிரி மகா புஷ்கர விழாவுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் ராஜாமணி தெரிவித்தார்.
திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் காவிரி மகா புஷ்கர விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கி கலெக்டர் கே.ராஜாமணி பேசியதாவது:-
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் வருகிற 12-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை காவிரி மகா புஷ்கர விழா நடைபெற உள்ளது. விழாவினை முன்னிட்டு மாநகராட்சியினர், விழா தொடங்கும் நாள் முதல் முடியும் நாள் வரை பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 24 மணி நேரமும் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தை சுற்றியுள்ள பகுதிகளில் விழா நாட்களில் சேரும் குப்பைகளை உடனுக்குடனே அகற்ற வேண்டும். காவிரி நதிக்கரையில் குளிப்பதற்கு ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் தனித்தனியே 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டியுடன் கூடிய குழாய்கள் அமைக்க வேண்டும். பெண்களுக்கு உடை மாற்றும் அறைகள், தற்காலிக ஓய்வறைகள் ஆகியவை அமைத்து தர வேண்டும்.

மேலும் பக்தர்கள் புனித நீராடும் போது அபாயகரப் பகுதிக்கு செல்லாமல் இருக்க அதிக காவலர்களை கொண்டு பாதுகாப்பு வழங்க வேண்டும். அபாயகர பகுதியை ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்தல் வேண்டும். பக்தர்களின் பாதுகாப்பு, பஸ்கள் நிறுத்துமிடம், காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். தேவையான இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைத்து கண்காணிக்க வேண்டும்.
மேலும் விழா நாட்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கவும், அனைத்து விரைவு ரெயில்களையும், ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் நிறுத்தவும் மற்றும் ரெயில் நிலையத்தில் திருவிழா தொடர்பான விளம்பரங்களை அமைக்கவும் அனுமதிக்க வேண்டும். விழா நாட்களில் ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் இருந்து முன் பதிவு செய்து கூடுதலான இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதற்காக ரெங்கவிலாச மண்டபத்தில் பயணச்சீட்டு விற்பனை மற்றும் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தி தரப்படும்.

பக்தர்கள் பிளாஸ்டிக் பை, தண்ணீர் பாக்கெட்டுகள் மற்றும் உணவு பொருட்கள் கொண்டு வருவதை தடுத்திட வேண்டும். உணவகங்களில் தரமான உணவு வழங்கிடவும், கூடுதல் விலையில் விற்பனை செய்வதை தடுத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் அவசர தேவைக்கு இலவச மருத்துவ உதவி அளிக்க நடமாடும் மருந்தகம், ஆம்புலன்ஸ் வசதி, முதலுதவி முகாம் மற்றும் மருத்துவ முகாம்களை ஏற்படுத்திட வேண்டும். காவிரி ஆற்றில் விழா நாள் முழுவதும் தண்ணீர் திறந்து விட ஏற்பாடு செய்திட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் சக்திகணேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அபிராமி, வருவாய் கோட்டாட்சியர்கள் ராஜராஜன், சுமன், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், அறநிலையத்துறை இணை ஆணையர் ஜெயராமன் உள்பட அனைத்து துறை அதிகாரிகள், விழா கமிட்டியினர் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.