இன்று முதல் திருச்சி-சென்னை இடையே புதிய விமான சேவை
திருச்சி- சென்னைக்கு புதிய விமான சேவை இன்று முதல் தொடங்குகிறது. திருச்சி கலெக்டர் ராஜாமணி கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார். திருச்சி விமானநிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவையாக ஜெட் ஏர்வேஸ் விமானம் சென்னைக்கு விமான சேவை அளித்து வருகிறது. திருச்சியில் இருந்து சென்னைக்கு தினமும் காலை 11.40 மணி, மாலை 6.20 மணி, இரவு 9.40 என 3 சேவைகளை அளித்து வருகிறது. இந்நிலையில் திருச்சியில் இருந்து சென்னைக்கு புதிய விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனத்தின் சார்பு நிறுவனமான அலியான்ஸ் நிறுவனம் இன்று முதல் தொடங்க உள்ளது.
தினமும் காலை 7.35 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு காலை 8.35 மணிக்கு திருச்சி வந்தடையும். மீண்டும் திருச்சியில் இருந்து காலை 9.20 மணிக்கு புறப்பட்டு 10.35 மணிக்கு சென்னை சென்றடையும். 68 இருக்கைகள் கொண்ட ஏர்கிராப்ட் வகை விமானம் இன்று காலை 8.35 வருகிறது. முன்னதாக இதையொட்டி நடைபெறும் அறிமுக விழாவில் திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார். இதில் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், விமானநிலைய இயக்குநர் குணசேகரன், சிஐஎஸ்எப் துணை கமிஷனர் மிஸ்ரா, முனைய மேலாளர் ஜெயவர்தன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
Post a Comment